கோலாலம்பூர், அக் 28: 2025ஆம் ஆண்டில் 20,000க்கும் அதிகமான புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மலேசிய கல்வி அமைச்சின் துணையமைச்சர் வோங் கா வோ மக்களவையில் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப, மலேசிய கல்வி அமைச்சு மொத்தம் 20,141 புதிய ஆசிரியர்களை நியமிக்கவுள்ளது.
இவ்வாண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 10,045 புதிய ஆசிரியர்கள் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும், மீதமுள்ள 10,096 பேர் (PISMP பட்டதாரிகள் மற்றும் பொதுச் சந்தையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) இந்த நவம்பர் மாதம் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் வோங் தெரிவித்தார்.
இந்தக் குறிப்பிடத்தக்களவிலான ஆள்சேர்ப்பு, நாடு முழுவதும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சனையை, குறிப்பாக அடிப்படைக் கல்விப் பாடங்கள் மற்றும் சிறப்புக் கல்விப் பிரிவுகளில் உள்ள பற்றாக்குறையைக் கையாள்வதில் கல்வி அமைச்சின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.
மேலும், கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகள் (PdP) சீராகவும் தரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய, ஆசிரியர்களின் தேவையை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.




