கோலாலம்பூர், அக் 27 - தாய்லாந்து கம்போடியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது பாராட்டினைத் தெரிவித்து கொண்டார்.
தென்கிழக்கு ஆசியாவின் அண்டை நாடுகளுக்கு இடையில், ஒரு வரலாற்று ஒப்பந்தத்தை எளிதாக உருவாக்கியதில், அன்வாரின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற அமைதி ஒப்பந்தத்தின் கையெழுத்திட்டதன் மூலம், நீண்ட காலமாக மோதலில் இருந்த கம்போடியா - தாய்லாந்தின் பகைமை மனப்பாங்கு டத்தோ ஸ்ரீ அன்வாரின் தலையீட்டால் அமைதி நிலைக்கு திரும்ப உதவியுள்ளதாகவும் டோனல்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற தாய்லாந்து- கம்போடியா இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது டிரம்ப் இவ்வாறு கூறினார்.
இதனிடையே, தாய்லாந்து - கம்போடியா அமைதி ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த முயற்சிகளை ஆதரிப்பதில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் பங்கு மற்றும் அர்ப்பணிப்பிற்காகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாரும் நன்றி தெரிவித்தார்.
வட்டாரத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் டிரம்பின் அக்கறை மற்றும் உறுதிப்பாட்டையும் அன்வார் குறிப்பிட்டார்.
பெர்னாமா




