ஷா ஆலம், அக் 25 — எதிர்வரவிருக்கும் மழைக்காலத்தையும், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள சிலாங்கூர் அரசு முழுமையாகத் தயாராக இருப்பதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை கவுன்சிலர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் அனைத்து ஊராட்சி மன்றங்களும் மற்றும் மாவட்ட அலுவலகங்களும் பேரிடர் நடவடிக்கையின் அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட தயாராக உள்ளன.
“இது எங்கள் தயார்நிலை கட்டத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. மாநில அளவில், எந்தவொரு பேரிடரையும் குறிப்பாக வெள்ளத்தையும் எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்.
“அனைத்து முன் ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. எந்த சம்பவமும் நடந்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயார்,” என்று அவர் Universiti Teknologi MARA (UiTM) ஷா ஆலாமில் நடைபெற்ற ``Selangor Talent in Arts and Entrepreneurship Programme (STEP)`` நிகழ்ச்சையில் கூறினார்.
முன்னதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, தேசிய தயார்நிலை மாதம் 2025 தொடக்க விழாவை முன்னிட்டு சிலாங்கூர் பேரிடர் மேலாண்மை குழுவை (Selangor Disaster Management Squad) தொடக்கி வைத்தார்.
மழைக்காலம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் நிலையில், சிலாங்கூர் எந்தவொரு அவசர நிலையையோ அல்லது பேரிடரையோ சமாளிக்க முழுமையாகத் தயாராக உள்ளது என்றார்.
இந்த தயார்நிலை நடவடிக்கைகள் கடந்த ஜூலை மாதத்திலிருந்து நடைமுறையில் உள்ளன. மேலும், இதில் மலேசிய ஆயுதப்படைகள் (ATM), மலேசியக் காவல்துறை படை (PDRM), தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைப்புகளும், மாநிலப் பேரிடர் மேலாண்மையின் கீழ் உள்ள உள்ளூர் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.




