பெட்டாலிங் ஜெயா: கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த மாதம் நடத்தப்பட்ட ஆறு திடீர் சோதனைகளில், போலீசார் மொத்தம் 500 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு சுமார் RM3.85 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 14 முதல் 17 வரை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனைகளில் மூன்று மலேசியர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ’ ஃபாடில் மார்சூஸ் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
போலீசார் மொத்தம் 462.5 கிலோ MDMA மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். அதற்கு கூடுதலாக 38.7 கிலோ கஞ்சா, 195 கிராம் Erimin, 5 மாத்திரைகள், 52.8 கிராம் Ecstasy மாத்திரைகள், மற்றும் 32.8 கிராம் கெட்டமைன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பணம், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள், கடிகாரங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த இரண்டு கும்பல்கள் அடுக்கு மாடி குடியிருப்பை போதைப்பொருள் சேமிப்பு மையமாக பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்ததாகவும், சில பரிவர்த்தனைகள் வாகன நிறுத்துமிடங்களில் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
முதல் கும்பல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் MDMA போதைப்பொருளை விநியோகித்த நிலையில் இரண்டாவது கும்பல் செப்டம்பர் மாதம் முதல் கிள்ளன் பள்ளத்தாக்கு பகுதியில் கஞ்சா விநியோகித்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.