கோலாலம்பூர், அக் 20: கடந்த வியாழக்கிழமையிலிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட ஒரு போலீஸ் உறுப்பினர் இன்று அதிகாலை சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையக தங்கும் குடியிருப்பிற்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார்.
40 வயதான அந்த போலீஸ் உறுப்பினர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் தங்கும் குடியிருப்பிற்கு நுழைந்ததை அங்கு பணியில் இருந்த போலீஸ் உறுப்பினர் ஒருவர் கவனித்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்ததார்.
அந்த போலீஸ் உறுப்பினர் தற்போது பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளார் என்றும் காணாமல் இருந்த காலப்பகுதியில் மோரிப் மற்றும் புத்ரா ஹைட்ஸ் பகுதிகளில் உள்ள பல மசூதிகளில் தங்கி இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த போலீஸ் உறுப்பினர் வியாழக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் போலீஸ் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. பின்னர், தேடுதல் முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இரவு சுமார் 9.15 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாக வான் அஸ்லான் கூரினார்.