கோலாலம்பூர், அக் 18 — பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கும் நிலைத் தன்மைக்கும் அடித்தளமாகியுள்ள இன ஒற்றுமையும் சமரசமும் மிக முக்கியமானவை என இன்று கே.எல். சென்ட்ரல் வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு வலியுறுத்தினார்.மேலும் பல இனங்களும் மதங்களும் இணைந்து வாழும் மலேசியாவின் தனித்துவம் குறித்து பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தார். “அமைதியும் நிலைத்தன்மையும் இல்லாமல் பொருளாதாரம் மற்றும் கலாசார வளர்ச்சி இருக்க முடியாது,” என்று கூறினார்.
இன ஒற்றுமை என்பது மடாணி அரசாங்க உருவாக்கத்தின் மையக் கூறாகும் என வலியுறுத்தினார்.பல இன மக்களை கொண்ட நாட்டை நிர்வகிப்பது எளிதல்ல என்றாலும், அரசு எப்போதும் “எல்லோருக்கும் நீதி” என்ற கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் என தெரிவித்தார். அரசின் கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் இன அடிப்படையில் அல்ல, மாறாக மக்களின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன எனவும் கூறினார்.மலேசிய இந்திய சமூகத்திற்கு அரசு சில புதிய முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், இந்திய தொழில் முனைவோருக்கு உதவ Amanah Ikhtiar Malaysiaக்கு RM50 மில்லியன் மற்றும் TEKUN Nasionalக்கு RM50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீடுகளை வாங்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் உதவ Skim Jaminan Kredit Perumahan (SJPP)-க்கு RM1.6 பில்லியன் மற்றும் Skim Jaminan Pembiayaan Perniagaanக்கு RM600 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி துறையில், இந்திய மாணவர்கள் அரசு பல்கலைக்கழகங்களில் சேரும் வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசினார். இந்த பிரச்சனை குறித்து அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தி, STPM உள்ளிட்ட சிறந்த மாணவர்களுக்கு கூடுதலாக 1,500 இடங்களை ஒதுக்கியுள்ளது. பொறியியல், கணக்கியல், மருத்துவம், டிஜிட்டல் மற்றும் மொழி போன்ற துறைகளில் இவ்விடங்கள் வழங்கப்படுகின்றன. பல தசாப்தங்களாக நீடித்து வந்த இந்த பிரச்சனையை தீர்த்து, அனைத்து திறமையான மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
அதே சமயம், நிர்வாக சீர்திருத்தங்கள் ஊழல் ஒழிப்பும் தீபாவளியின் “ஒளியின் சின்னமாக” வலியுறுத்தினார். கடந்த காலத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகளில் இருந்து அரசு RM15.5 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளை மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். “இந்த நிதி மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்; சில பேராசை மிக்க தலைவர்களின் செல்வத்தை பெருக்க அல்ல,” என்று அவர் கூறினார்.அவர், ஊழலை எதிர்க்கும் போராட்டத்தில் இனமோ சமயமோ பாராமல் அனைத்து மக்களுக்கும் இணைந்து நடத்த வேண்டிய துப்புரவு பணிகளில் ஒன்றாகும் என வலியுறுத்தினார்.
தீபாவளியின் ஒளி அலங்காரமல்ல அது நமக்கு போதிப்பது அன்பு, அர்ப்பணிப்பு, உழைப்பு, நீதி, நம்பிக்கை, தர்மம் தூய்மை, ஆகிய நன்நெறிகள், அந்த ஒளிர்வுகளின் சின்னம் என்பதை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்றார் பிரதமர்.