கோலாலம்பூர், அக் 9 – சைபர்ஜெயாவில் அமைக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைந்த ஐசி வடிவமைப்பு தொழில்நுட்ப பூங்கா (Integrated Circuit Design Park) எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளதாக சிலாங்கூர் மாநில முதலீட்டுத் துறை நிர்வாகச் செயலாளர் இங் சீ ஹான் தெரிவித்தார்.
பூச்சோங் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கமான முதல் ஐசி வடிவமைப்பு பூங்கா, தற்போது உலகத் தரமிக்க 12 நிறுவனங்களால் முழுமையாக குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரித்துவரும் தேவை மற்றும் வளர்ச்சியின் வேகத்தை எதிர்கொள்வதற்காக இரண்டாவது பூங்கா தொடங்கப்படவுள்ளது என்றார்.
பூச்சோங் பூங்கா, 5,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டு, MaiStorage, Skyechip, Weeroc, AppAsia ChipsBank மற்றும் SensoremTek Sdn Bhd போன்ற உலகத் சேமிகண்டாக்டர் நிறுவனங்களை உள்ளடங்கியதுடன், மாநிலத்தின் முன்னோடியான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகிறது.
மாநிலத்தின் வளர்ச்சிப் பார்வையின் கீழ், சிறப்பாகப் பணியாற்றும் ஐசி வடிவமைப்பு துறைக்கு ஆதரவாகப் பத்தாண்டுகள் காலத்திற்கு ஆண்டுக்கு RM5 முதல் RM10 மில்லியன் வரையிலான நிதி ஒதுக்கப்படும் என்பதை ஏற்கனவே டத்தோ மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
சேமிகண்டாக்டர் வடிவமைப்புத் துறையில் முதலீடுகள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, வேலைக்கு அமர்ந்தும் புதிய பட்டதாரிகளுக்குக் குறைந்தபட்ச ஆரம்ப ஊதியம் RM6,000 வழங்கும் நிபந்தனையை மாநிலம் விதித்துள்ளதாகவும், இது திறமைமிக்க மனிதவளத்தை பாதுகாப்பதற்கான முன்னெடுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தத் துறை நிதி வலிமை வாய்ந்ததும், உயர் திறன் நிரம்பியதுமாக இருப்பதனால், இத்தகைய ஆரம்ப ஊதியங்களை வழங்கும் திறன் நிறுவனங்களுக்கு உறுதியாக இருக்கும்.
தென்னாசியாவிலுள்ள பெரும்பாலான நாடுகள் எதிர்கொள்ளும் நடுத்தர வருமான முறையை (middle-income trap) மாற்றி அமைப்பதற்கான வழியும் இதுவாகும்,” என அவர் வலியுறுத்தினார்.