கோலாலம்பூர், அக் 9 - எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கி, மலேசியா முழுவதும் சுமார் 2.1 மில்லியன் வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும் என அரச மலேசிய காவல்துறை படை (PDRM) மதிப்பீடு செய்துள்ளது.
தீபாவளி பொது விடுமுறை காலக்கட்டத்தில் போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், “ஓப் லஞ்சார் (Op Lancar)” எனும் சிறப்பு நடவடிக்கை அக்டோபர் 17 முதல் 21ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார்.
"இந்த நடவடிக்கையின் நோக்கம், முக்கிய நெடுஞ்சாலைகள், கூட்டாட்சி சாலைகள் மற்றும் நகர சாலைகள், அத்துடன் முக்கிய சுற்றுலா இடங்களில் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்கு ஆகும்.
விபத்துகளில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உடனடி உதவியை வழங்குவதன் மூலம் கூடுதல் நெரிசல்களைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.
அவர், இன்று பெந்தோங் மாவட்ட காவல் தலைமையக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் பங்கேற்ற பின் ஊடகவியலாளர்களிடம் இதனை கூறினார்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, 500 JSPT அதிகாரிகள் நாடு முழுவதும் முக்கிய நெடுஞ்சாலைகள், கூட்டாட்சி, நகர சாலைகள், மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும், வணிக வாகனங்களுக்கான பயணத்தடை தொடர்பான வழிகாட்டுதலுக்காக, மலேசிய போக்குவரத்து அமைச்சகம் (MOT) வழங்கும் அறிவுறுத்தலுக்காக PDRM காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனுடன், மலேசிய கல்வி அமைச்சகம் (KPM) தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் வரை கூடுதல் பள்ளி விடுமுறை அளித்து, மேற்கு மலேசியாவில் உள்ள மாணவர்களுக்கு 5 நாட்கள் மற்றும் சரவாக் மாணவர்களுக்கு 4 நாட்கள் என அக்டோபர் 17 முதல் 22 வரை நீடிக்கும் நீண்ட விடுமுறையை அறிவித்துள்ளது.
— பெர்னாமா