ஷா ஆலம், அக் 7: Selangor International Business Summit (SIBS) 2025 மாநாட்டின் மூலம் கடந்த ஆண்டு பதிவான RM13.86 பில்லியன் மதிப்புள்ள பரிவர்த்தனையை அதிகரிக்க முடியும் என மாநில அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
மாநாடு நடைபெறும் நான்கு நாட்களில் குறைந்தது RM10 பில்லியன் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களை நிலைநிறுத்துவதே அரசின் தற்காலிக இலக்காகும்.
மேலும், இந்த மாநாடு 50,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநில முதலீட்டுத் தலைமை செயல் அதிகாரி இங் ஸீ ஹான் கூறினார் .
“இந்த இலக்குகள் சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, மலேசியா இந்த ஆண்டில் ஆசியான் (ASEAN) தலைமைத் தோழமை நாடாக செயல்படுகிறது.
மேலும், சிலாங்கூர் மலேசியாவின் மிக முன்னேறிய மாநிலமாக இருப்பதால், ஆசியான் உறுப்புநாடுகள் மற்றும் பராந்திய வர்த்தகத் தோழமையாளர் நாடுகளிலிருந்து வர்த்தகக் காட்சியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களை ஈர்க்கும் திறன் கொண்டது,” என அவர் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
“இந்த மாநாடு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (PKS) முக்கியமான வாய்ப்பாக அமையும். இது அவர்களுக்கு புதிய சந்தைகளை ஆராயவும், திறமையான வணிக நுணுக்கங்களை கற்று கொள்ளவும் வழிவகுக்கும்.”
நாளை தொடங்கவுள்ள இந்த மாநாடு சனிக்கிழமை வரை நடைபெறும்.
இந்நிகழ்வு சிலாங்கூரை ஆசியான் மண்டலத்தின் முக்கிய முதலீட்டு மையமாக உறுதிப்படுத்துவதோடு, மேலும் பல உள்ளூர் நிறுவனங்களுக்கு உலக சந்தைகளில் நுழைய வழிகாட்டும் வகையில் அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இதில் உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழில் துறையினருக்காக 700க்கும் மேற்பட்ட கண்காட்சி கியோஸ்க்குகள் (booths) அமைக்கப்பட உள்ளன.
2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாநாடு, இந்த வருடம் இரண்டு புதிய நிகழ்வுகளை அறிமுகப்படுத்துகிறது. அவை: Selangor International Healthcare Conference மற்றும் Selangor Aerospace Summit (SAS) — இது முன்பு ``Selangor Airshow`` என அறியப்பட்டது.
கடந்த ஆண்டு, SIBS மாநாடு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில் RM13.86 பில்லியன் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் பதிவாகின.
இது 2023ஆம் ஆண்டின் பெறப்பட்ட RM6.12 பில்லியனை ஒப்பிடும் போது இருமடங்காகப் பதிவாகிய சாதனையாகும்.