கோலாலம்பூர், அக். 7 - பாலஸ்தீனம் - இஸ்ரேல் நெருக்கடி தொடர்பில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் வெளியிட்ட அமைதித் திட்டம் மீதான மலேசியாவின் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தின் போது விவாதிக்கப்படும்.
அமைச்சர் கேள்வி-பதில் அங்கத்தின் போது பாயா பெசார் பாரிசான் நேஷனல் உறுப்பினர் சஹார் அப்துல்லா இந்த கேள்வியை எழுப்புவார்
என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிட்டப்பட்ட இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களின் உரிமை மற்றும் அந்நாட்டின் இறையாண்மைக்கு போராடும் மலேசியாவின் கோட்பாடு மற்றும் முயற்சிகளுக்கு ஏற்ற வகையில் அந்த அமைதித் திட்டம் அமைந்துள்ளதா என்பது குறித்தும் அவர் வினா தொடுப்பார்.
அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 2026 மலேசியா வருகை ஆண்டை முன்னிட்டு அனைத்துலக நிலையிலான ஊக்குவிப்பு மற்றும் விளம்பர நிகழ்வுகள் மற்றும் மாநில அரசுகளின் பங்கேற்பு குறித்து மஸ்ஜிட் தானா தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ மாஸ் எர்மிமியாத்தி சம்சுடின் பிரதமரிடம் கேள்வியெழுப்புவார்.
மேலும், ‘பணத்திற்கேற்ற மதிப்பு‘ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் செய்யப்படும் செலவினம் குறித்து கேள்வியெழுப்பும் மாஸ் எர்மியாத்தி கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதைப் போல் 2025 டிசம்பர் 31ஆம் தேதி பெரிய அளவிலான தொடக்க நிகழ்வொன்றை நடத்தும் திட்டம் உள்ளதா என்றும் வினவுவார்.
இதனிடையே, வர்த்தக வாகன நடத்துநர்களை உட்படுத்திய சாலை போக்குவரத்து துறையின் பாதுகாப்பு தணிக்கை சம்பந்தப்பட்ட விரிவான நடவடிக்கை குறித்து மாஸ் காடீங் ஹராப்பான் உறுப்பினர் மோர்டி பிமோல் போக்குவரத்து அமைச்சரிடம் கேள்வி எழுப்புவார்.
பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான மூன்றாவது கூட்டத் தொடர் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் தேதி வரை 35 நாட்களுக்கு நடைபெறும்.