முறுக்கு மணம் மிக்க ராஜேஸ்வரியின் வீடு; பாரம்பரியமும் பாசமும் கலந்த தீபாவளி நினைவு

6 அக்டோபர் 2025, 6:47 PM
முறுக்கு மணம் மிக்க ராஜேஸ்வரியின் வீடு; பாரம்பரியமும் பாசமும் கலந்த தீபாவளி நினைவு

கிள்ளான், அக் 6 – கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸை சேர்ந்த 65 வயதான ஓய்வு பெற்ற ராஜேஸ்வரி பழனியின் வீட்டில் தீபாவளி வந்தாலே ஒரு தனி உற்சாகம் நிலவுகிறது. அந்த வீட்டை நெருங்கும் முன்பே பரவிவரும் நறுமணமே அதற்குச் சாட்சி. அது வேறெதுவும் அல்ல, அவரின் கைகளால் தயாராகும் பாரம்பரிய முறுக்கின் மணம்.

சிறுவயதில் பெற்றோர்களுடன் பாட்டியுடன் சேர்ந்து முறுக்கு செய்யும் அந்த இனிய தருணங்கள், இன்று ராஜேஸ்வரியின் வாழ்க்கையின் முக்கிய அத்தியாயமாகி விட்டது. “நான் சிறுவயதில் பாட்டியுடன் சேர்ந்து மாவை பிசைந்து, முறுக்கு உரளில் விளையாடியும் இருப்பேன். அந்த வாசனை, அந்த சிரிப்பு எனக்கு இன்னும் நினைவில் உள்ளது” என்று சிரித்தபடி கூறினார் ராஜேஸ்வரி.

அந்த சிறு வயதில் விளையாட்டாக இருந்த ஆர்வமே, இன்று அவரின் சிறு தொழிலாகவும் மாறியுள்ளது. தன் வீட்டிலேயே அரிசியை ஊறவைத்து, உலர்த்தி, அரைத்து, பாசிப்பருப்பு வறுத்து, அனைத்தையும் கைமுறையில் கலந்து பிசைந்து முறுக்கு செய்வதை அவர் இன்றும் தொடர்கிறார். “நான் இன்னும் மில்லில் மாவு அரைக்கிறேன், வெண்ணெய், உப்பு, நீர் எல்லாமே சரியான அளவில் இருக்கணும். அப்போது தான் மொறு மொறு முறுக்கு கிடைக்கும்,” என்று பெருமையுடன் பகிர்ந்தார்.
ராஜேஸ்வரியின் வீட்டில் தீபாவளி முன்பு ஒரு சிறிய தொழிற்சாலை போல மாறிவிடும். “என் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் எல்லோரும் சேர்ந்து முறுக்கு செய்ய தொடர்வோம். ஒருவர் மாவை பிசைவது, மற்றொருவர் பிழிவது, இன்னொருவர் பொரிப்பது என்று அனைவரும் இணைந்து செயல்படுவோம். வீட்டில் அவர்களின் சிரிப்பு, பேச்சு மற்றும் முறுக்கின் வாசனை நிறைந்திருக்கும். அதுதான் எங்களுக்கு உண்மையான தீபாவளியின் ஆனந்தம்,” என்று புன்னகையுடன் பகிர்ந்தார்.
மேலும் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு நகைச்சுவையான நினைவையும் அவர் பகிர்ந்துகொண்டார். “சிறுவயதில் ஒருமுறை அம்மா எள் போட மறந்துட்டாங்க. பாதியில் அப்பா கேட்டதுல தான் ஞாபகம் வந்தது. அந்த நாளிலிருந்து நான் எல்லா பொருட்களையும் முன்கூட்டியே தயார் பண்ணுவேன்,” என்று சிரித்தபடி கூறுனார்.

அவரின் கூற்றுப்படி, முறுக்கு செய்வது ஒரு கலையும் பொறுமையும் சேர்ந்து வரும் பண்பாடு. “எண்ணெய் சூடு சரியா இல்லையென்றால் முறுக்கு மொறு மொறுப்பாக வராது. அதுதான் கடையில் வாங்குவதற்கும் வீட்டில் செய்வதற்கும் வித்தியாசம். வீட்டிலே செய்வதில் அன்பு இருக்கிறது,” என்று அவர் உணர்ச்சியுடன் கூறுகிறார்.
ராஜேஸ்வரியின் வீட்டில் தீபாவளி என்பது வெறும் பண்டிகை அல்ல, தலைமுறைகளை இணைக்கும் பாசத்தின் பிணைப்பு. “இப்போ என் பேரக்குழந்தைகளும் முறுக்கு செய்ய கற்றுக்கொள்ளுகிறார்கள். நான் பாட்டியிடமிருந்து கற்றது போல, அவர்கள் என்னிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள் அதுதான் என் பெருமை,” என்று அவர் பெருமையுடன் கூறினார்.
ஆனால், இன்றைய தலைமுறையினர் பாரம்பரிய முறைகளை மறந்து வருவதை அவர் கவலையுடன்  பார்க்கிறார். “நம்ம பாரம்பரியத்தை நாம்தான் காப்பாத்தணும். வீட்டில பெரியவர்கள் இருக்கும்போதே இளையவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்,” என அறிவுறுத்துகிறார் ராஜேஸ்வரி.
முறுக்கின் மணம் பரவும் அவரது வீடு, உண்மையில் பாரம்பரியமும் குடும்ப பாசமும் கலந்த தீபாவளியின் உயிர் வடிவமாக திகழ்கிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.