கிள்ளான், அக். 4- ஆண்டு இறுதியில் ஏற்படக்கூடிய பருவ மழை மற்றும் அதனால் உண்டாகும் வெள்ளத்தை எதிர்கொள்ள செந்தோசா தொகுதி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மழைகால தயார்நிலை ஒருங்கிணைப்புக் கூட்டத்தை தொகுதி ஏற்பாடு செய்திருந்தது. செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுப்பணித் துறை, வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை, கே.டி.இ.பி., கிள்ளான் அரச மாநகர் மன்றம், கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் பிரதிநிதி-கள் கலந்து கொண்டனர்
மேலும், இக்கூட்டத்தில் கிள்ளான் மாநகர் அரச மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் மற்றும் செந்தோசா சட்டமன்றத்தின் சிறப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மழைக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராவது, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பது வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
சட்டவிரோத கட்டுமானம், வீட்டு வடிகால் மேலடுக்குகளை முழுமையாக மூடுதல் மற்றும் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டுதல் போன்ற செயல்கள் வெள்ளப் பிரச்சினைக்கும் துப்புரவுப் பணிகளுக்கும் தடையாக இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்கூறப்படும் பிரச்சினைகளுக்கு எதிராக உடனடியாக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய டாக்டர் குணராஜ், வீட்டு வளாகத்தை குறிப்பாக முன் மற்றும் பின் பகுதியில் தூய்மையாகப் பராமரிப்பதில் குடியிருப்பாளர் களின் ஒத்துழைப்பையும் தாங்கள் பெரிதும் நாடுவதாகக் கூறினார்.
வடிகால் மற்றும் கால்வாய் அமைப்புகளை சுத்தம் செய்யும் பணிகளில் இடையூறு ஏற்படுத்தக்கூடிய தடைகளை வைக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக துப்புரவுப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படக்கூடிய இடங்கள் மற்றும் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் தொடர்பான காணொளிகளை தங்களுக்கு அனுப்பி உதவும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
பருவ மழையை எதிர்கொள்ள செந்தோசா தொகுதியில் வெள்ளத் தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம்
4 அக்டோபர் 2025, 10:50 AM