ஷா ஆலம், அக். 4- சபா மாநில சட்டமன்றம் வரும் திங்கள்கிழமை கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. சட்டமன்றக் கலைப்பு தொடர்பான அறிவிப்பை சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நோர் வெளியிடுவார் என்று மாநிலத்தின் உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றைய மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு சட்டமன்றம்கலைக்கப் படுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சபா மாநிலத்தின் ஸ்டார் கட்சி மற்றும் டத்தோஸ்ரீ ஜெப்ரி கிட்டிங்கான் தலைமையிலான எஸ்ஏபிபி எனப்படும் சபாமுற்போக்கு கட்சி சபா மக்கள் கூட்டணியிலிருந்து (ஜி.ஆர்.எஸ்.) விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
சபா மாநில சட்டமன்றம் இயல்பாக கலைக்கப்படுவதற்கான தேதியில் சட்டரீதியாக குழப்பம் நிலவி வரும் நிலையில் ஜி.ஆர்.எஸ்- பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அரசுக்கு தலைமையேற்கும் ஹாஜிஜி, மாநிலத்தின் 17வது தேர்தலை கூடியவிரைவில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலை அவர் சபா ஆளுநர் துன் மூசா அமானிடமிருந்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பதினாறாவது சபா மாநில சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் கடந்த 2020 நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்றதால் சட்டமன்றத்தின் ஐந்தாண்டு தவணைக் காலம் நவம்பர் 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக சபா மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ காட்ஸிம் யாஹ்யா முன்னதாக கூறியிருந்தார்.
இருப்பினும், கடந்த 2020 செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி மாநிலத்தில் திடீர் தேர்தல் நடைபெற்றப் பின்னர் கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப் பாட்டு காலத்தின் போது அதாவது 2020 அக்டோபர் 9ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற அமர்வு நடைபெற்றதன் அடிப்படையில் அவையின் ஐந்தாண்டு தவணை அடுத்த வாரம் வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது எனவும் கூறப்படுகிறது.