புத்ராஜெயா, செப். 30 - அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அழைக்கும் முடிவு அனைத்துலக அரசியல் பின்னணியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஆசியான் அமைப்பின் தலைவராக இருக்கும் மலேசியா, பாலஸ்தீனப் பிரச்சனை தொடர்பாக தனது நிலைப்பாட்டை நேரடியாக அந்த அமெரிக்கத் தலைவரிடம் வெளிப்படுத்த அவரின் இந்த வருகை ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறினார்.
டிரம்ப்பை ஏன் அழைக்க வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள்... டிரம்ப் இஸ்ரேலை ஆதரிக்கவில்லையா, இஸ்ரேல் தற்போது காசாவை அழிக்கவில்லையா… அப்படியானால், டிரம்பை ஏன் அழைக்க வேண்டும் என இப்போது வெளியே பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
இவ்வாண்டு மலேசியா ஆசியானின் தலைவராக உள்ளது. ஆசியான் நாடுகளின் ஒருமித்த நிலைப்பாட்டை நாங்கள் கொண்டு வருகிறோம்... (பாலஸ்தீன பிரச்சனையில்) எங்களுக்கு சொந்த நிலைப்பாடு இருக்கலாம் என்று அவர் இன்று உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் பேசும்போது கூறினார்.
இந்த உச்சநிலை மாநாட்டில் 10 ஆசியான் உறுப்பு நாடுகளிடமிருந்து ஒருமித்த இணக்கத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொண்டு வருவார் என்று சைபுடின் தெரிவித்தார்.
எனவே, டிரம்ப்பின் மலேசிய வருகை அனைத்துலக அரசியல் அடிப்படையிலானது. பிரதமர் ஆசியான் தலைமைத்துவத்தை பிரத்நிதிக்கிறார். அவர் (அன்வார்) 68 கோடி மக்களைக் கொண்ட ஒரு பிராந்தியத்தின் தலைவராக உள்ளார். அதன் பொருளாதாரம் பெரியதாகவும் வலுவாகவும் உள்ளது.
எனவே, அவர் (அன்வார்) அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களுக்கு முன்னால் ஆசியானின் குரலாகப் பேச முடியும் என்று அவர் கூறினார்.
டிரம்ப்பை அழைக்கும் முடிவு அனைத்துலக அரசியலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது
30 செப்டெம்பர் 2025, 8:37 AM