காஜாங், செப். 28- இம்மாதம் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான 38வது நோய்த் தொற்று வாரத்தில் சிலாங்கூரில் மொத்தம் 34,017 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 51,675 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 65.8 சதவீதம் குறைவாகும்.
மாநில அரசு, சிலாங்கூர் சுகாதார இலாகா, ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட நில அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் விளைவாக டிங்கி பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
மாநில அரசு தொடர்புடைய நிறுவனங்களின் சிறப்பான ஒத்துழைப்புடன் டிங்கி பாதிப்புகளை 65 விழுக்காடு குறைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்தை ஒழிப்பதற்கான பரஸ்பர ஒத்துழைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளூர் சமூகங்களை ஊக்குவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா மற்றும் ஊராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
இன்று ஏயோன் செராஸ் செலாத்தானில் கெம்பாரா டெங்கி நெகிரி சிலாங்கூர் தொடர் 2 நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
மூன்று மாவட்டங்கள் 'ஹாட் ஸ்பாட்' எனப்படும் டிங்கி அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறிய ஜமாலியா, பெட்டாலிங் மாவட்டம் அதிக சம்பவங்களைப் பதிவு செய்துள்ள வேளையில் அதைத் தொடர்ந்து உலு லங்காட் மற்றும் கோம்பாக் மாவட்டங்கள் உள்ளன என்றார்.
அந்த மூன்று மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டிங்கி சம்பவங்கள் ஏற்படுவதற்கு அடர்த்தியான மக்கள் தொகை, விரைவான வளர்ச்சி மற்றும் தடுப்பு குறித்த குறைவான பொது விழிப்புணர்வு ஆகியவை காரணமாகும் என்று அவர் கூறினார்.
சிலாங்கூரில் டிங்கி சம்பவங்கள்65.8 விழுக்காடு சரிவு
28 செப்டெம்பர் 2025, 10:16 AM