கிள்ளான், 27 செப் – வேலைவாய்ப்புகளை அதிகரித்து, மக்களுக்கு நேரடியாக வேலை சந்தையை அணுகும் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், சிலாங்கூர் மாநில அரசு மனிதவள , வறுமை ஒழிப்பு மற்றும் பூர்வீக குடி மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான நிலை குழுவின் கீழ் கார்னிவல் “ஜெலாஜா ஜாப்கேர் 2025” இன்று கிள்ளான் மாவட்டத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிறுவனங்கள் தெரிவித்ததாவது, இத்தகைய வேலைவாய்ப்பு கார்னிவல்கள் அவர்கள் நிறுவனங்களுக்கு நேரடியாகப் பொருத்தமான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. மேலும், வேலை தேடுவோர் தங்களின் தகுதிகள், அனுபவம் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப பணியிடங்களை தேர்வு செய்யும் சாத்தியங்களை உருவாக்குகின்றன. பல வேலை தேடுவோர் நிகழ்ச்சியில் நேரடியாக நேர்முகத் தேர்வுகளுக்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம், மாநில அரசு இத்தகைய முயற்சிகள் வேலை இல்லாமை விகிதத்தை குறைப்பதிலும், இளைஞர்களின் திறமைகள் பயனுள்ளதாகப் பயன்படுத்தப்படுவதிலும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் என வலியுறுத்தினார். மனிதவள வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜெலாஜா ஜாப்கேர் திட்டம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
அடுத்த ஜெலாஜா ஜாப்கேர் வேலைவாய்ப்பு கார்னிவல் வரும் அக்டோபர் 11ஆம் தேதி சபாக் பெர்ணமிலும், நவம்பர் 15ஆம் தேதி சிப்பாங் மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு மையங்கள், வேலை தேடுவோருக்கு மேலும் ஆயிரக்கணக்கான வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய முயற்சிகள் மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, வேலை தேடுவோரின் நம்பிக்கையையும் மீட்டெடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. வேலைவாய்ப்பை நாடும் மக்களுக்கு இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்று பல தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.