கிள்ளான், 27 செப் – வேலைவாய்ப்புகளை அதிகரித்து, மக்களுக்கு நேரடியாக வேலை சந்தையை அணுகும் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், சிலாங்கூர் மாநில அரசு மனிதவள , வறுமை ஒழிப்பு மற்றும் பூர்வீக குடி மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான நிலை குழுவின் கீழ் கார்னிவல் “ஜெலாஜா ஜாப்கேர் 2025” இன்று கிள்ளான் மாவட்டத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, கிள்ளான் மாநகர ஹம்சா மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வீரமான் அவர்களால் வாக்பவுண்ட் (Walkabout) முறையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த வேலைவாய்ப்பு கார்னிவல், வேலை தேடுவோருக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நேரடி சந்திப்பை ஏற்படுத்தும் தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, குறிப்பாக இளைஞர்கள், பட்டதாரிகள், மற்றும் திறமைகள் கொண்ட பணியாளர்கள் தங்களுக்குத் தகுந்த வேலை வாய்ப்புகளைத் தேடி அறிந்து கொள்ளும் ஒரு வலுவான தளத்தை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என தெரிவித்தார். வேலை சந்தையில் போட்டி அதிகரித்து வரும் சூழலில், வேலை தேடுவோர் நிறுவன பிரதிநிதிகளுடன் நேரடியாக சந்தித்து உரையாடும் இத்தகைய வாய்ப்புகள், அவர்களுக்கு வேலை பெறுவதில் கூடுதல் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் தரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இக்கார்னிவலில் மொத்தம் 29 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அவற்றின் மூலம் வேலை தேடுவோருக்காக சுமார் 4,272 காலியிடங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்புகளை வழங்கிய முக்கிய நிறுவனங்களில் YC Capital Sdn. Bhd., Aluminium Company of Malaysia Berhad, Panasonic Appliances Air-Conditioning (M) Sdn. Bhd., Mah Sing Healthcare Sdn. Bhd., மற்றும் Infinity Logistics and Transport ஆகியவை அடங்குகின்றன. இந்நிறுவனங்கள் தங்களின் பல்வேறு துறைகளில் திறமை வாய்ந்த பணியாளர்களை எதிர்நோக்கியுள்ளன. உற்பத்தி, சுகாதாரம், லாஜிஸ்டிக்ஸ், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன.