சிங்கப்பூர், செப். 25 - சிங்கப்பூரின் சாங்கி சிறையில் இன்று காலை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மலேசியரான தட்சிணாமூர்த்தி காத்தையாவின் மரணதண்டனையை சிங்கப்பூர் அரசு நிறுத்தியுள்ளது.
இந்த தகவலை அவரது குடும்ப வழக்கறிஞர் சுரேந்திரன் நாகராஜன் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது உறுதிப்படுத்தினார்.
நள்ளிரவுக்குப் பிறகு சிறையிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் குடும்பத்தினருக்கு இந்த சமீபத்திய நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போதைக்கு எங்களிடம் வேறு எந்த தகவலும் இல்லை. நல்ல முடிவுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு 44.96 கிராம் டயமார்ஃபின் போதைப்பொருளை சிங்கப்பூருக்கு கடத்தியதாக 39 வயதான தட்சிணாமூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
தான் வைத்திருந்த பையில் போதைப் பொருள் பொட்டலங்கள் இருப்பது தனக்குத் தெரியாது என்றும், அவை சீன மருந்து என்று நினைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தட்சணாமூர்த்திக்கு 2022 ஏப்ரல் 29ஆம் தேதி மரணதண்டனை நிறைவேற்ற தொடக்கத்தில் நாள் குறிக்கப்பட்டிருந்தது. எனினும், நீதித்துறை சீராய்வு நடவடிக்கைகள் தொடங்குவதற்கு எதுவாக அவருக்கு எதிரான மரணதண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு வழங்கப்பட்டது.
அண்மைய மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் நான்கு மலேசியர்களில் ஒருவராக தட்சிணாமூர்த்தி உள்ளார்.
சாமிநாதன், செல்வராஜூ, லிங்கேஸ்வரன் ராஜேந்திரன் மற்றும் பன்னீர் செல்வம் பரந்தாமன் ஆகியோர் மற்ற மலேசியர்கள் ஆவர்.
தட்சணாமூர்த்தியின் மரண தண்டனையை சிங்கை அரசு கடைசி நேரத்தில் நிறுத்தியது
25 செப்டெம்பர் 2025, 4:25 AM