ஷா ஆலம், செப். 23 - சிலாங்கூர் படைப்பாற்றல் பொருளாதார வியூக செயல் திட்ட அமலாக்கம் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் படைப்பாற்றல் பொருளாதாரத் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு 2,000 கோடி வெள்ளியை பங்களிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
தற்போது இத்துறை சிலாங்கூர் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 200 கோடி வெள்ளியை மட்டுமே பங்களிப்பதை மலேசிய புள்ளிவிபரத் துறையின் சமீபத்திய அறிக்கையின் காட்டுகிறது என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2,200 கோடி வெள்ளியை பங்களிக்கிறது. அந்தத் தொகையில் 200 கோடி வெள்ளியை சிலாங்கூரில் உள்ள தொழில்துறையினரிடமிருந்து பெறுகிறது.
இந்த எண்ணிக்கை மிகப் பெரியதாக இல்லை என்றாலும் குறைந்தபட்சம் நாங்களும் பங்களிக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
வரும் நவம்பர் மாதம் சிலாங்கூர் படைப்பாற்றல் பொருளாதார வியூகச் செயல் திட்டத்தை நாங்கள் தொடங்கவிருக்கிறோம். இது 10 ஆண்டு கால திட்டமிடலை உள்ளடக்கியது. அந்தக் காலகட்டத்தில், 2,000 கோடி வெள்ளி வரை வருமானம் ஈட்டமடியும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ.மாநாட்டு மையத்தில் 2025 சிலாங்கூர் படைப்பாற்றல் பொருளாதாரக் கண்காட்சியை முன்னிட்டு (SCEE25) நடைபெற்ற கலந்தாய்வு அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வு சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் தலைமையில் நடைபெற்றது.