புத்ராஜெயா, செப். 22 - இலக்கு மானிய செயல்முறையை அமல்படுத்துவதன் மூலம் பெறப்படும் வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புத் துறைகளுக்கு பயன்படுத்தப்படுவதன் மூலம் அத்தொகை மக்களுக்கே மீண்டும் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
எடுத்துக்காட்டாக, இலக்கு டீசல் மானிய நடவடிக்கை
ரஹ்மா அடிப்படை உதவித் திட்டத்தின் கீழ் (சாரா) 100 வெள்ளியை மலேசியர்களுக்கு
வழங்க அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கிறது என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
சாரா நன்றி நவிலும் திட்டங்கள் மூலம் வருமானத்தை மக்களுக்கு நாங்கள் திருப்பித் தர முடிகிறது. அது 100 வெள்ளி என்றாலும் நாட்டிற்கான நிதி தாக்கத்தை பொறுத்தவரை 200 கோடி வெள்ளி. டீசல் எரிபொருளுக்கு இலக்கு மானியம் நிர்ணயித்ததால் இது சாத்தியமானது.
இப்போது நாட்டின் பிரஜை அல்லாதவர்களுக்கு மானிய இலக்கு சற்று அதிகரித்துள்ளது. (ஆனால்) நாட்டு மக்களுக்கு குறைந்துள்ளது. மேலும் இந்த வருமானம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்குத் திரும்பச் செலுத்தப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காயா, ஆசிரியர் கல்விக்கூட வளாகம், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் உட்பட பல கட்டுமானங்கள் மீண்டும் கட்டப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
இது ஒரு புதிய சுமை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த நிதியிலிருந்து நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் எங்கள் கவனம் இன்னும் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பில் உள்ளது என்று இன்று பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர கூட்டத்தில் தனது உரையை வழங்கும்போது அவர் கூறினார்.
இந்நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸலினா ஓத்மான், பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாலிஹா முஸ்தாபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் பொதுச் சேவையின் தலைமை இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ வான் அகமது டாஹ்லான் அப்துல் அஜீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக மானிய இலக்கை செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் துணிச்சலான நடவடிக்கையை மக்கள் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று தாம் நம்புவதாகப் பிரதமர் கூறினார்.
இலக்கு மானிய வருமானம் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைக்கு பயன்படுத்தப்படும் - பிரதமர்
22 செப்டெம்பர் 2025, 6:14 AM