கோல பெராங், செப். 22 - வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நாடு முழுவதும் 150 சமூகப் படகுகளை விநியோகிக்கும் பணியை நிறைவு செய்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் முதற்கட்ட பணிகளை உள்ளூர் சமூகத்தினர் மேற்கொள்ளும் வகையில் படகுகள் விநியோகிக்கப்பட்டதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.
அதே நேரத்தில், அதிக அளவிலான வெள்ளம் மற்றும் வலுவான நீரோட்டங்களின் போது பயன்படுத்துவதற்கு பெரிய படகுகளும் தயாராக இருக்கும் என்று அவர் கூறினார்.
வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் வகையில் 150 சமூகப் படகுகளை விநியோகிக்கும் பணியை நாங்கள் முடித்துவிட்டோம். இந்தப் படகுகளின் விநியோகம், பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை உள்ளூர் சமூகம் மேற்கொள்ள வாய்ப்பளிக்கிறது.
இதன் மூலம் நாம் எதிர்கொள்ளும் சில தளவாடச் சிக்கல்களைத் தீர்க்க இயலும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நாங்கள் ஆழமற்ற நீர் மற்றும் பல தடைகள் இருந்த நகர்ப்புற வெள்ளப்பெருக்கு பிரச்சனைகளை அடிக்கடி எதிர்கொண்டோம். அங்கு எங்களுக்கு சிறிய மற்றும் இலகுரக படகுகள் தேவைப்பட்டன.
எனவே, இந்த இரண்டு பிரச்சனைகளையும் நாங்கள் தீர்த்துவிட்டோம் என்று நேற்று செகாயு பொழுதுபோக்கு வனத்தில் நடைபெற்ற தீயணைப்புத் துறையுடனான மலேசிய மீடியா கிளப் சங்கம் ஒத்துழைப்பு திட்டத்தின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்கிய பின்னர் அவர் கூறினார்.
எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் வெள்ளத்தை சமாளிக்க தீயணைப்புத் 24,000 பணியாளர்களுடன் தீயணைப்புத் துறை தயாராக இருப்பதாக நோர் ஹிஷாம் கூறினார்.
இதற்கிடையில், படகு இழுவை வாகனங்கள் மற்றும் இலகுரக செயல்பாட்டு வாகனங்கள் உட்பட 200 புதிய வாகனங்களை வாங்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவை விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.