கோலா திராங்கானு, செப். 20- சமூக ஊடகங்களில் மோசடிக் கும்பல் வெளியிட்ட இல்லாத முதலீட்டுத் திட்ட விளம்பரத்தினால் கவரப்பட்ட முதியவர் ஒருவர் 76,740 வெள்ளியை இழந்தார்.
62 வயதான அந்த நபர் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி சமூக ஊடக தளமான முகநூலில் ஒரு பங்கு முதலீட்டு விளம்பரத்தைக் கண்டதாக கோல திராங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் கூறினார்.
முன்னாள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை ஊழியரான அந்த முதியவர், வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்ததைத் தொடர்ந்து ஒரு பெண் நடத்தும் வாட்ஸ்அப் குழுவுடன் இணைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தன்னை ஒரு ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் சந்தேக நபர், முதலீட்டு நடைமுறைகளை சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
இத்திட்டத்தில் ஆர்வம் கொண்ட பாதிக்கப்பட்ட நபர் கடந்த ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 18 வரை ஏழு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தம் 76,740 வெள்ளியை முதலீடு செய்தார் அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அத்திட்டம் வாக்குறுதியளிக்கப்பட்டபடி லாபத்தை வழங்கத் தவறியதால் தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்ததார். இருப்பினும், பல மடங்கு லாபத்தைப் பெற கூடுதல் மூலதனத்தைச் செலுத்துமாறு அந்த முதியவர் பணிக்கப்பட்டார் என அஸ்லி கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது எனக் கூறிய அவர், கும்பலின் பல்வேறு மோசடி தந்திரங்களை எளிதில் நம்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது என்றார்.
போலி முதலீட்டுத் திட்டத்தில் முதியவர் வெ.76,000 பறிகொடுத்தார்
20 செப்டெம்பர் 2025, 7:41 AM