கோலாலம்பூர், செப். 20- நாட்டில் 35வது நோய்த் தொற்று வாரம் வரை 43,087 கோவிட்-19 சம்பவங்கள் பதிவான வேளையில் அவற்றில் புதிய வகை XFG திரிபு பரவலை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.
இந்த 35வது நோய்த் தொற்று வாரத்தில் இந்த பதிவான மொத்த சம்பவங்களில் 8.2 சதவீதம் XFG புதிய திரிபு வகையைச் சேர்ந்தவையாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.
மரபணு கண்டறிதல் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் கோவிட்-19 நோய்த் தொற்றில் NB1.8.1 திரிபு மிக அதிகமாக அதாவது 39.4 விழுக்காடு ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அதனைத் தொடர்ந்து JN.1 (18.1 சதவீதம்) மற்றும் XEC (13.3 சதவீதம்) வகை திரிபுகள் உள்ளன என்று அவர் கூறினார்.
ஒட்டுமொத்தமாக 35வது நோய்த் தொற்று வாரம் வரை 43,087 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 85,297 சம்பவங்களாக இருந்தன (49.5 சதவீதம் குறைவு) என்று அவர் குறிப்பிட்டார்
35வது வாரத்தில் கோவிட்-19 பரவல் 12.8 சதவீதம் குறைந்துள்ளது. 34வது வாரத்தில் பதிவான 681 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது தற்போது 594 ஆகக் குறைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 35வது நோய்த் தொற்று வாரத்தில்
91 வயது வீடற்ற முதியவர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஒரு புதிய மரணம் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19: மலேசியாவில் புதிய வகை XFG திரிபு கண்டுபிடிப்பு
20 செப்டெம்பர் 2025, 4:47 AM