ஷா ஆலம், செப். 18 - சிலாங்கூரில் பணிபுரியும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களில் 628 பேர் கடந்த 2020 முதல் இதுவரை திவாலானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தனிநபர் கடன்கள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைகள் அவர்களின் இந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளன.
தனிநபர் கடன்கள் முக்கிய காரணம் என அடையாளம் காணப்பட்ட வேளையில் அதனைத் தொடர்ந்து வீடு மற்றும் வாகனக் கடன்கள் உள்ளது ஆய்வின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக மாநில திவால் துறை இயக்குநர் கே. பவானி கூறினார்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் தனிநபர் கடன்களாகும். கிரெடிட் கார்டுகள் வாயிலாக இதனை நாம் பார்க்க முடியும். இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனாலும், இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது இது ஒரு நல்ல பலனைக் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தனிநபர் கடன்களைப் பொறுத்தவரை நாம் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியிருக்கும். மேலும் வங்கிகளும் விண்ணப்பங்களை கடுமையாக்குவது உள்ளிட்ட விஷயங்களைப் பரிசீலிக்கலாம். அதுதான் எங்கள் பரிந்துரை என்று அவர் தெரிவித்தார்.
இன்று மாநில திவால் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கான நிதி கல்வியறிவு நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைக் கூறினார்.
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மானும் கலந்துகொண்டார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மட்டும் நிதிப் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. மாறாக, ஆடம்பரமான மற்றும் அதிகப்படியான வாழ்க்கை முறையால் நிதி சிக்கல் அதிகம் ஏற்படுகிறது என்று அசாலினா தமது உரையில் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் 2020 முதல் 628 அரசு ஊழியர்கள் திவால் - மாநில திவால் துறை இயக்குநர் பவானி தகவல்
18 செப்டெம்பர் 2025, 9:39 AM