கோலாலம்பூர், செப் 18 - அனுமதிப் பத்திர நிபந்தனைகளை மீறியதால் 8.45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 32 இறக்குமதி கார்களை சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
Ops Purple எனும் சோதனை நடவடிக்கை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடத்தப்பட்டதில், 48 மாதங்களுக்கும் மேலாக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அக்கார்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கோலாலம்பூர் சுங்க இயக்குநர் வான் நோரிசான் வான் டாவோட் தெரிவித்தார்.
Mercedez Benz, Audi, BMW உள்ளிட்ட கார்கள் அவற்றில் அடங்கும்.
அவற்றின் மொத்த மதிப்பு 3.07 மில்லியன் ரிங்கிட் ஆகும். அதே சமயம் இறக்குமதி வரி ஏய்ப்பு மட்டுமே 5.37 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதன் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.
கடத்தல் தொடர்பான தகவல்களை 1-800-88-8855 என்ற hotline எண்கள் மூலம் வழங்குமாறும் சுங்கத் துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டது.