சென்னை, செப் 17 - தமிழகத்தின் கொடைக்கானலில் மலைப்பாங்கான சாலையில் சுற்றுலா வேன் தடம்புரண்டதில், 12 மலேசியர்கள் காயமடைந்தனர்.
ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், வெள்ளைப்பாறையில் சுமார் 100 அடி பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்தது.
கடந்த சனிக்கிழமை மாலை நிகழ்ந்த இவ்விபத்தில் காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக சென்னையில் உள்ள மலேசிப் பேராளரகம் வாயிலாக வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா கூறியது.
அவர்களில் பலருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன; நால்வர் படுகாயமடைந்தனர்; ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என அது உறுதிப்படுத்தியது.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உரிய தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வேளையில், இந்தியாவில் உள்ள மலேசியர்களுக்கு, குறிப்பாக மழைக்காலங்களில் பயணம் செய்பவர்களுக்கு, விஸ்மா புத்ரா ஆலோசனையையும் வெளியிட்டது. மலேசியர்கள் வழுக்கலான சாலைகள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு ஆளாகும் மலைப்பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதோடு, ஆபத்து அவசரங்களின் போது உதவிகள் எளிதில் கிடைக்கவும் பயணக் காப்பீட்டைப் பெறுவதற்கும் பயணிகள் அருகிலுள்ள மலேசிய தூதரகத்தில் பதிவு செய்யவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
உதவி அல்லது மேற்கொண்டு தகவல்களுக்கு, மலேசியர்கள் சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தை +91 44 2433 4434 / +91 44 2433 4435 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.