கோலாலம்பூர், செப். 17 - செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி ஊழலை ஒழிக்கும் முயற்சிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) வலுப்படுத்தும்.
விசாரணையை விரைவுபடுத்துவதற்கும் விரயம் ஏற்படும் வழிகளை அடைப்பதற்கும் நிர்வாகம் மற்றும் சேவை வழங்கும் முறையை தரம் உயர்த்துவதற்கும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.
தற்போது ஊழல் நடவடிக்கைகள் பாரம்பரிய நடைபெறுவதில்லை. மாறாக, டிஜிட்டல் பணப்பரிமாற்றம், கிரிப்டோ நாணயம், அயல் நிதி கணக்குகள் மற்றும் இயங்கலை நிதி வாயிலாக வெகு விரைவாக செயல்படுகின்றன என்று எம்.ஏ.சி.சி. துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) டத்தோஸ்ரீ அகமது குசைரி யாஹ்யா கூறினார்.
இங்குதான் செயற்கை நுண்ணறிவு ஊழலுக்கு எதிரான போர்க்களத்தில் புதிய வீயூக ஆயுதமாக செயல்படுகிறது. இதன் நோக்கம் மனிதர்களை மாற்றுவதில்லை. மாறாக, எம்.ஏ.சி.சி. போன்ற அரசு நிறுவனங்களை ஆக்ககரமான அமைப்பாக விளங்க உதவுகிறது என்று அவர் சொன்னார்.
செயற்கை நுண்ணறிவின் வாயிலாக விசாரணையாளர்கள் ஆயிரக்கணக்கான கோப்புகளை சில நிமிடங்களில் தணிக்கை செய்ய முடியும்.
அதே சமயம், வழக்கத்திற்கு மாறான பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிவது, தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே விவேக ஒருங்கமைப்பை உருவாக்குவது, நலன் சார்ந்த சாத்தியங்களை ஆய்வு செய்வது போன்ற பணிகளையும் மேற்கொள்ள இயலும் என்றார் அவர்.
வழக்கத்திற்கு மாறான ஆடம்பர வாழ்க்கை முறை, உயர் தாக்கம் கொண்ட அரசாங்கத்திட்டங்கள் மற்றும் குற்றச்செயல் நடப்பதற்கு முன்னரே ஊழல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறித்த
எச்சரிக்கையை விடுப்பது போன்ற பணிகளுக்கும் ஏ.ஐ. பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
விசாரணையை வலுப்படுத்தும் அதேவேளையில் ஆக்ககரமான நிர்வாகச் சேவையை மேம்படுத்துவதற்கும் உள்தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு டிஜிட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.