ஷா ஆலம், செப் 15: அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல், துரித உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே இளைஞர்களிடையே மாரடைப்பு சம்பவங்கள் அதிகரிப்பதற்குக் காரணம் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் மாரடைப்பு சம்பவங்கள் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அவற்றில் 5 முதல் 10 சதவீதம் இளைஞர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கேபிஜே கிள்ளான் சிறப்பு மருத்துவமனையின் சுகாதாரப் பரிசோதனை சேவைத் தலைவர் டாக்டர் ஷோபனா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இளைய தலைமுறையினரின் மாறிவரும் வாழ்க்கை முறை அவர்களுக்கு 20 வயதிலேயே மாரடைப்பு ஏற்படக் காரணமாக அமைந்ததாக அவர் கூறினார்.
“மலேசியாவில் கடந்த ஆண்டு 18 வயதுடைய ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட மிக இளைய வயது மாரடைப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, 2022ஆம் ஆண்டில் 25 வயதுடைய ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
“உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் முன்பு 50 வயதிலேயே ஏற்பட்டிருந்தால், இப்போது 30 வயதின் முற்பகுதியில் உள்ள நோயாளிகள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான இளைஞர்கள் சிறு வயதிலிருந்தே துரித உணவை சாப்பிடத் தொடங்குகிறார்கள். மேலும், அது அவர்களுக்குப் பிடித்தமானதாக மாறிவிடுகிறது. இதனால், உடல் பருமன் முதிர்வயது வரை நீடிக்கும் என்று அவர் கூறினார்.
"உடற்பயிற்சி செய்ய 24 மணி நேரத்தில் குறைந்தது 30 நிமிடங்களை ஒதுக்குமாறு," அவர் கூறினார்.
மக்கள் தினசரி சுகாதார கண்காணிப்பு கருவியாக ஸ்மார்ட் கடிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
"ஸ்மார்ட் கடிகாரங்கள் மன அழுத்த அளவைக் கண்டறிந்து பதிவுகளை வைத்திருக்க முடியும். ஸ்மார்ட் கடிகாரங்கள் தினசரி அடிகளின் எண்ணிக்கையையும் பதிவு செய்கின்றன. எனவே, நாளுக்கு நாள் அடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இது நம்மை ஊக்குவிக்கும். நாம் அதிக நேரம் உட்கார்ந்தால் ஸ்மார்ட் கடிகாரங்கள் எச்சரிக்கைகளை வழங்க முடியும்," என்று அவர் கூறினார்.