ஜோகூர் பாரு, செப். 14- இம்மாத இறுதியில் ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு வெ.1.99 ஆகக் குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
மக்களின் சுமையைக் குறைக்கும் மடாணி அரசாங்கத்தின் வாக்குறுதி நிறைவேற்றப் படுவது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
சந்தையின் அசல் விலையுடன் ஒப்பிடுகையில் மக்கள் குறைந்த விலையில் எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
செப்டம்பர் மாதம் வந்து விட்டது, ஆனால் எண்ணெய் விலை இன்றும் குறையவில்லை என்பதால் சிலர் கோபப் படுகிறார்கள். செப்டம்பர் மாத இறுதிக்கு முன்பு என்று நான் ஏற்கனவே சொன்னேன். செப்டம்பர் 10 ஆம் தேதி மாத இறுதியா? செப்டம்பர் 15 ஆம் தேதி மாத இறுதியா? ஒரு நிமிடம் காத்திருங்கள். குறையுமா இல்லையா?.
வேறு எந்த நாடு மக்களுக்கு இவ்வளவு குறைந்த விலையை வழங்குகிறது என்று சொல்லுங்கள்? நாங்கள் உறுதியளிக்கிறோம், நாங்கள் வழங்குகிறோம் என்று அவர் நேற்று ஜோகூர் மாநில அளவிலான 27 ஆண்டு ரிபோமாஸி பொதுப் பேரணியில் வழங்கிய உரையில் அவர் கூறினார்.
மானியம் இல்லாத அசல் பெட்ரோல் விலை லிட்டருக்கு வெ.2.50 முதல் வெ.2.60 வரை எட்டும் நிலையில் தற்போது ரோன்95 விலை லிட்டருக்கு வெ.2.05 ஆக உள்ளது என்று நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் தெரிவித்தார்.
இதற்கிடையில், தாம் மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணங்கள் பொழுதுபோக்கிற்காக அல்லாமல் வெளிநாட்டுத் தலைவர்களின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப் படுகிறது என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இது மலேசியாவின் நிலைப்பாடு மற்றும் அந்தஸ்துடன் ஒத்துப்போவதோடு அனைத்துலக அளவில் அது மிகவும் மதிக்கப்படுகிறது என்றும் அன்வார் கூறினார்.