கோலாலம்பூர், செப். 12 - பாலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பாலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட துயரமிக்க உயிரிழப்புகளுக்காக நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று அவர் இன்று முகநூலில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
இந்த கடினமான காலத்தில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மற்றும் இந்தோனேசிய மக்களுடன் மலேசியா ஒன்றுபட்டு உறுதியாக நிற்கிறது என்று அன்வார் தெரிவித்தார்.
உங்கள் துயரத்தில் மலேசியா பங்கு கொள்கிறது. இந்தப் பேரழிவிலிருந்து பாலி மக்கள் மீண்டு வர நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்று அவர் மேலும் கூறினார்.
சுற்றுலா தீவான பாலியில் புதன்கிழமை பெய்த கனமழையால் ஜெம்ப்ரானா, கியான்யார், பாண்டோங், தபானன், கரங்கசெம், க்லுங்குங் மற்றும் டென்பசார் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் அறிக்கையின்படி இந்த வெள்ளத்தில் இதுவரை 14 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது
மேலும் இருவரை இன்னும் காணவில்லை. 659 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலியில் வெள்ளம் - பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் அனுதாபம்
12 செப்டெம்பர் 2025, 7:29 AM