கோலாலம்பூர், செப். 8 - லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் அமைதிப்படையில் (யுனிஃபில்) பங்கேற்பதை 2026 ஆம் ஆண்டின் இறுதியில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்பு, மலேசியா அடுத்த ஆண்டு லெபனானுக்கு மேலும் ஒரு அமைதி காக்கும் குழுவை அனுப்பும்.
ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தின் யுனிஃபில் ஆணையை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க கடந்த மாதம் இறுதி வாரத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்தார்.
அதன்படி அடுத்தாண்டு நாங்கள் ஒரு குழுவை அனுப்புவோம். அதன் பிறகு லெபனானில் உள்ள யூனிஃபிலில் மலேசியாவின் வருகை இருக்காது.
இதற்கு பின்னர் அவர்களின் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் பலவற்றை நாங்கள் பார்ப்போம் என்று அவர் இன்று சுங்கை பீசியில் உள்ள கேம் பெர்டானா இராணுவ மேற்கு கள கட்டளை தலைமையகத்திற்கு பணி நிமித்த வருகை மேற்கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு மன்றம் கடந்த ஆகஸ்டு 29ஆம் தேதி யூனிஃபிலின் ஆணையை இறுதி 16 மாதங்களுக்கு நீட்டித்தது. இந்தப் பணி 2026 டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடையும்.
லெபனானில் உள்ள ஐ.நா. படைகளை முறையான மற்றும் பாதுகாப்பான முறையில் குறைக்கும் மற்றும் திரும்பப் பெறும் செயல்முறையை உறுதி செய்வதை இந்தத் தீர்மானம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் போர்நிறுத்தத்தைக் கண்காணிப்பது மற்றும் நாட்டின் தெற்கில் லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆதரவளிப்பது ஆகிய நோக்கங்களுக்காக கடந்த 1978 முதல் யூனிஃபில் படைகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
இதர ஐ.நா. உறுப்பு நாடுகளின் அமைதி காக்கும் படைகளுக்கு உதவுவதற்காக மலேசியா கடந்த 2006 ஆம் ஆண்டு யூனிஃபில் பணியில் பங்கேற்கத் தொடங்கியது.