இஸ்தான்புல், செப். 8 - மத்தியஸ்தர் ஒருவர் மூலம் அமெரிக்காவிடமிருந்து புதிய போர்நிறுத்த பரிந்துரையை தாங்கள் பெற்றுள்ளதாகப் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் நேற்று அறிவித்தது.
இதன் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க தாங்கள் தயாராக இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு அமெரிக்க தரப்பிலிருந்து மத்தியஸ்தர்கள் மூலம் சில யோசனைகளைப் பெற்றோம் என்று ஹமாஸ் டெலிகிராமில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கும் எந்தவொரு
திட்டத்தையும் ஹமாஸ் வரவேற்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தெளிவான அறிவிப்பு மற்றும் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய துருப்புக்களை முழுமையாக திரும்பப் பெறுவதற்கு பதிலாக அனைத்து கைதிகளையும் விடுவிப்பது குறித்து விவாதிக்க தாங்கள் தயாராக இருப்பதாக ஹமாஸ் வலியுறுத்தியது.
காஸாவில் நிர்வாகத்தை நிர்வகிக்க ஒரு சுயேச்சை பாலஸ்தீனக் குழுவை அமைப்பதற்கும் ஹமாஸ் ஒப்புக்கொண்டது.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்வைத்த பரிந்துரையின் அடிப்படையில் எகிப்திய மற்றும் கத்தார் மத்தியஸ்தர்களின் முன்மொழிவை தாங்கள் ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்தது.
ஆயினும், இந்த பரிந்துரைக்கு "ஆக்கிரமிப்பு தரப்பு" (இஸ்ரேல்) இன்றுவரை பதிலளிக்கவில்லை. மாறாக அதன் படுகொலைகள் மற்றும் இன அழிப்பு பிரச்சாரத்தைத் தொடர்கிறது.
அமெரிக்காவின் புதிய போர் நிறுத்தப் பரிந்துரை - ஹமாஸ் வரவேற்பு
8 செப்டெம்பர் 2025, 10:11 AM