ஜோர்ஜ் டவுன், செப். 6- நிறுவனத்தின் மொத்த விற்பனையிலிருந்து 3,000 வெள்ளிப் பணத்தைப் பயன்படுத்திவிட்டதை மறைக்க
இங்குள்ள ஜாலான் மின்டென் 1 குளுகோரில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் தாம் கத்தியால் குத்தப்பட்டதாக பொய்யுரைத்த உறைந்த உணவுப் பொருள் லோரி ஓட்டுநரின் நாடகம் அம்பலத்திற்கு வந்தது.
பொதுமக்களிடமிருந்து இரவு 8.17 மணிக்கு
வந்தப் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த 32 வயது நபரின் மோசடி கண்டுபிடிக்கப்பட்டதாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரோசாக் முகமது தெரிவித்தார்.
இரவு 7.45 மணியளவில் அந்த லோரி ஓட்டுநரை கொள்ளையடித்த மூன்று பேர் அவரின் வயிற்றில் கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்டது.
அந்த நபருக்கு 3.5 சென்டிமீட்டர் ஆழமான கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.
அவர் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அப்துல் ரோசாக் கூறினார்.
இருப்பினும், மேல் விசாரணையில் அந்த நபரிடம் உண்மையில் கொள்ளையடிக்கப்படவில்லை அல்லது கத்தியால் குத்தப்படவில்லை என்பதும் நிறுவனத்தின் தயாரிப்பு பொருள்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை செலவழித்து விட்டதால் தனது முதலாளியை ஏமாற்றுவதற்காக இந்த சம்பவத்தை அவர் ஜோடித்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
இது தொடர்பில் அறிக்கைகள் அல்லது தவறான தகவல்களை வழங்க வேண்டாம் என்று அப்துல் ரோசாக் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். இத்தகைய குற்றத்திற்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 182 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என அவர் எச்சரித்தார்.