ஷா ஆலம், செப். 5- நேற்றிரவு உலு லங்காட் வட்டாரத்தில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பத்து கிராமங்களைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் வேளையில் பொதுப்பணித் துறையின் கண்காணிப்பில் கரைகளைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக டூசூன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹன் அப்துல் அஜீஸ் கூறினார்.
வெள்ளம் வீடுகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் கரைகள் இடிந்து விழுந்ததோடு மரங்களும் வீடுகள் மீது விழுந்தன என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பிவிட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் சுங்கை செராய் தேசியப் பள்ளியின் வெள்ள நிவாரண மையம் இன்னும் தற்காலிகமாகத் திறந்திருந்தது.
குடியிருப்பாளர்களால் சமைக்க முடியாததால் நேற்றிரவு முதல் உணவு உதவி உடனடியாக வழங்கப்பட்டது. நிலைமை முழுமையாக சீரடையும் வரை இந்த உதவி தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தகுந்த உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக சேதத்தின் அளவு மதிப்பீடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஜோஹன் குறிப்பிட்டார்.
செராய் ஆற்றின் நீர்மட்டம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேகமூட்டமான வானிலை காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக அவர் கூறினார்.
உலு லங்காட்டில் வெள்ளம்:160 வீடுகள் பாதிப்பு- துப்புரவுப் பணிகள் தீவிரம்
5 செப்டெம்பர் 2025, 9:58 AM