ஷா ஆலம், செப். 5- வெள்ளம் காரணமாக ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் சுங்கை செராய் தேசிய பள்ளியில் திறக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தங்கள் குடியிருப்பு பகுதிகளில் நேற்று வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்ட வேளையில் பாதுகாப்பு குழுவினரும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களும் நிலையை கண்காணித்து வருவதாக சிலாங்கூர் பேரிடர் நிவாரண மையம் கூறியது.
வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் நிலைமையைக் கண்காணிக்கும் பணியில் பொது தற்காப்பு படை, ரேலா, சமூக நலத் துறை, போலீஸ், கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குழு மற்றும் உலு லங்காட் மாவட்ட நில அலுவலகம் ஆகியவை ஈடுபட்டுள்ளன என்ற அது தெரிவித்தது.
நிவாரண மையத்தில் தங்கியிருக்கும் பாதிக்கப் பட்டவர்களின் உடல்நிலையை உறுதி செய்ய உலு லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகம் அங்கு மருத்துவப் பரிசோதனை இயக்கத்தை மேற்கொண்டது.
விரும்பத்தகாத சம்வங்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்ய பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வெள்ளம் அதிகரிக்கும் பட்சத்தில் நிவாரண மையங்களுக்கு இடம் பெயரும்படி அம்மையம் கேட்டுக் கொண்டது.
கடுமையான மழையைத் தொடர்ந்து சுங்கை உலு லங்காட் அருகில் சகதி வெள்ளம் முட்டி அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பல வீடுகள் நீரில் மூழ்கின.