ஷா ஆலம், செப். 1 - சுபாங் ஜெயா, எஸ்.எஸ்.15 பகுதியில் கழிவுநீர் அமைப்பை சேதப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்படாத கழிவு நீர்க் குழாய் இணைப்புகளை உருவாக்கிய வணிக வளாகங்களுக்கு என்று சுபாங் ஜெயா மாநகர் மன்றம் நோட்டீஸ் அனுப்பும் என்று தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
சில சொத்து உரிமையாளர்கள் சமையலறை கழிவு நீர் மற்றும் மழைநீரை சட்டவிரோதமாக பிரதான கழிவுநீர் குழாயில் மாற்றிவிட்டதால் அடைப்புகள் ஏற்பட்டு அடிக்கடி
நிரம்பி வழிவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் இங் கூறினார்.
சில சொத்து உரிமையாளர்கள் சமையலறை கழிவுநீரையும் மழைநீரையும் அங்கீகரிக்கப்படாத இணைப்புகள் வழி நேரடியாக ஆய்வு சுரங்க அறையில் இணைத்துள்ளதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
சமையலறைகளில் இருந்து வெளியேறும் எண்ணெய் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதே நேரத்தில் (தவறான வழித்தடத்தில் விடப்படும்) மழைநீர் பெரும்பாலும் நிரம்பி வழிகிறது. ஏனெனில் கழிவுநீர் குழாய்களின் கொள்ளளவு மழை நீரை உள்வாங்கும் அளவுக்கு ஆற்றலை கொண்டிருக்கவில்லை.
இந்த விவகாரம் மாநகர் மன்றத்துடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு நடத்தி அந்த இணைப்புகளை திருப்பிவிட சம்பந்தப்பட்ட வளாகங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று நேற்று மேற்கொண்ட கள வருகையின் போது அவர் கூறினார்.
தேசிய நீர் சேவைகள் ஆணையம் (ஸ்பான்) அதன் கழிவுநீர் மூலதன பங்களிப்பு நிதியின் மூலம் இண்டா வாட்டர் குழுமத்தின் வழி மேற்கொள்ளப்பட்ட 27.4 லட்சம் வெள்ளி செலவிலான கழிவுநீர் குழாய் மாற்றுத் திட்டம் இப்பகுதியில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
இந்த 18 மாத கால இந்த திட்டம் 46 கடைகளை உள்ளடக்கிய பகுதியில் 400 மீட்டருக்கும் அதிகமான பழைய பிரதான கழிவுநீர் குழாய்களையும் 150 மீட்டருக்கும் அதிகமான இணைப்பு குழாய்களையும் மாற்றும் பணிகளை உள்ளடக்கியுள்ளது.
அதே நேரத்தில் இண்டா வாட்டர் குழுமம் வடிகால் அமைப்பையும் மேம்படுத்தியது.
மண்ணை உறுதிப்படுத்தும் பணிகள் காரணமாக ஏற்பட்ட தாமதங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 10 ஆம் தேதி நிறைவடைந்த இந்தத் திட்டம் மூலம் சுமார் 40,000 குடியிருப்பாளர்கள் பயனடைவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது என மிஷெல் கூறினார்.
எஸ்.எஸ்.15 பகுதியில் சட்டவிரோத கழிவுநீர் குழாய் இணைப்பு- எம்.பி.எஸ்.ஜே. நடவடிக்கை
1 செப்டெம்பர் 2025, 6:31 AM





