புத்ராஜெயா, ஆக. 30- ருக்குன் தெத்தாங்கா (ஆர்.டி.) அல்லது
குடியிருப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் தவணைக் காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டு ருக்குன் தெத்தாங்கா சட்டத்தின் (சட்டம் 751) கீழ் வரும் இந்த சட்டத்திருத்தம் வரும் அக்டோபர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுவதாக அவர் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற ருக்குன் தெத்தாங்காவின் தேசிய அளவிலான பொன்விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர், இந்த நியமனம் ஒரே பகுதியில் அதிகபட்சம் இரண்டு தொடர்ச்சியான தவணைகளை மட்டுமே கொண்டிருக்கும் என்றும் இது மொத்தம் ஆறு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கும் என்றும் கூறினார்.
ருக்குன் தெத்தாங்கா குழு உறுப்பினர்களுக்கான தற்போதைய இரண்டு ஆண்டு பதவிக்காலம் மிகக் குறுகியதாக உள்ளதோடு அவர்கள் தங்கள் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த போதுமானதாகவும் இல்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் ஒற்றுமைக்கான முக்கிய தளமாக ருக்குன் தெத்தாங்காவின் பங்கை வலுப்படுத்தும் திறன் கொண்ட, பொருத்தமான, பயனுள்ள மற்றும் சட்டத்தை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் கடப்பாட்டை இந்த உத்தேச சட்டத் திருத்தம் பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
சட்டம் 751இன் 8வது பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள உத்தேச சட்டத் திருத்தம் குழு உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது.
ருக்குன் தெத்தாங்கா செயல்குழு தவணைக் காலம் 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்
30 ஆகஸ்ட் 2025, 3:27 AM



