ஷா ஆலம், ஆக. 29 - கோலாலம்பூர், பங்சார் சவுத்தில் உள்ள தங்கள் அலுவலகம் கடந்த புதன்கிழமை போலீசாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை நிதிச் சேவை நிறுவனமான டூ குழுமம் நேற்று உறுதிப்படுத்தியது.
தங்கள் அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களுக்கு சோதனை நடவடிக்கைக்காக போலீசார் ‘வருகை புரிந்தனர்’ என அந்நிறுவனம் குறிப்பிட்டதாக Fintechnews.my செய்தி ஊடகம் தெரிவித்தது.
முன்னதாக, பணமோசடி எதிர்ப்பு சோதனை நடவடிக்கை பங்சார் சவுத் பகுதியில் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டதை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் உறுதிப்படுத்தியிருந்தார். எனினும், அந்நடவடிக்கை குறித்து கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
அந்த நிறுவனக் குழுமத்தின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தகக் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் பெருமளவிலான பணியாளர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சோதனைக்குட்படுத்தப்பட்ட அந்த வளாகத்திற்கும் நிதிச் சேவைகள் வழங்கி வரும் டூ பிரைம் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளதாக Lemon Market Trends தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பேங்க் நெகாராவின் உரிமம் பெற்று செயல்படும் அந்நிறுவனத்திலிருந்து பணத்தை மீட்டுக்கொள்ள முடியாதது தொடர்பாக பல புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


