குவாந்தான், ஆகஸ்ட் 28 - பகாங், குவாந்தானில் அமைந்துள்ள கம்போங் கெம்பாடாங்கில் உள்ள வீடு ஒன்றில், சுமார் 80 கிலோகிராம் எடைக் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கூரையிலிருந்து விழுந்து குடியிருப்பாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து காலை மணி 11.53க்கு தங்கள் தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்த உடனே, 10 உறுப்பினர்களும் இரண்டு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் குவாந்தான் மாவட்ட மலேசிய பொது தற்காப்புப் படை ஏ.பி.எம் அதிகாரி மேஜர் சாஹிடி சைனுடின் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு முன் சத்தம் கேட்டதாகவும், அச்சமயத்தில் தமது மகளின் அறையின் கூரை இடிந்து விழுந்திருப்பது கண்டறியப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் மஸ்லான் சகாரியா கூறினார். இரண்டாவது முறை மீண்டும் சத்தம் கேட்டு சென்றபோது, படுக்கையில் 10 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தாம் உடனடியாக 999, அவசர எண்ணிற்குத் தொடர்புக் கொண்டதாகவும் மஸ்லான் தெரிவித்தார்.
அந்த மலைப்பாம்பின் அளவு பெரிதாகவும் நீளமாகவும் இருந்ததால், அதை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு சுமார் 45 நிமிடங்கள் தேவைப்பட்டதாக சஹிடி சைனுடின் கூறினார்.
தொடர் நடவடிக்கைக்காக, அந்த மலைப்பாம்பு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா


