ஜோகூர் பாரு, ஆக. 25 - கோத்தா மாசாயில் கடந்த வியாழக்கிழமை போலீஸ்காரர்கள் போல நடித்து பொதுமக்களிடம் பணம் கேட்டதற்காக கைது செய்யப்பட்ட இரண்டு பாதுகாவலர்கள் விசாரணைக்கு உதவ வரும் ஆகஸ்டு 27ஆம் தேதி வரை ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோத்தா மாசாய், ஜாலான் பெர்டாகங்கான் டாமாய்யில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் கார் ஒன்றைச் சோதனை செய்த ஸ்ரீ ஆலம் போலீஸ் தலைமையக ரோந்துப் பிரிவினர் 29 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததாக ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் சுஹைமி இஷாக் தெரிவித்தார்.
தனது காதலனுடன் தனிமையில் இருந்த ஒரு பெண்ணின் காரின் ஜன்னலைத் தட்டி தங்களை போலீஸ்காரர்கள் என்று அவ்விரு சந்தேக நபர்களும் அறிமுகப்படுத்திக் கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் சொன்னார்.
பின்னர் அந்த ஜோடி செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்காக 2,000 கையூட்டு கேட்டுள்ளனர்.
அப்போது குற்றத் தடுப்பு ரோந்துப் பணிகளை மேற்கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளால் சந்தேக நபர் வெற்றிகரமாகக் மடக்கிப்பிடிக்கப்பட்டனர் என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கார், இரண்டு கைப்பேசிகள், ஒரு குறுக்குப் பை, ஒரு பாதுகாவலர் அட்டை, பெருநாள் அன்பளிப்பு உறை, 2,000 வெள்ளி ரொக்கம் மற்றும் ஒரு கார் தொலை கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் ஒருவருக்கு போதைப்பொருள் தொடர்பான பல குற்றப் பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 384 மற்றும் 170 வது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


