புத்ராஜெயா, ஆக.24 - சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நாளை நடைபெறவிருக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓ ஐ.சி.) வெளியுறவு அமைச்சர்கள் குழுவின் பிரத்தியேகக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் கலந்து கொள்ளவிருக்கிறார்.
முழு காஸா பகுதியையும் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் மற்றும் "பெரிய இஸ்ரேல்" என்ற அதன் சட்டவிரோத விரிவாக்கக் கண்ணோட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சு ஒரு அறிக்கையில் கூறியது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் ஜெருசலம் மற்றும் மாலே அடுமிம் இடையேயானபகுதியில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேற்றங்களை அமைக்கும் இஸ்ரேலின் இ1 பகுதி திட்டங்களையும் இந்த நிகழ்ச்சி நிரல் உள்ளடக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த 1967 ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக பாலஸ்தீனதாதை அங்கீகரிப்பதில் மலேசியா கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை
இந்த சிறப்புக் கூட்டத்தில் அதன் பங்கேற்புநிரூபிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, இஸ்ரேலிய அரசினால் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து தடுக்கப்படுவதால் காஸாவில் பாலஸ்தீனர்கள் அனுபவிக்கும் துன்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக முகமது ஹசான் தனது சகாக்களை சந்திப்பார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய சட்டவிரோத குடியேற்றத்தை அமைக்கும் இஸ்ரேலின் திட்டங்களைக் கண்டித்த 21 நாடுகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவையும் அடங்கும். இது பாலஸ்தீனர்களுக்கு எதிர்காலத்தில் இரு நாடுகள் என்ற தீர்வை சாத்தியமற்றதாக்குகிறது என்று அந்நாடுகள் கூறுகின்றன.
நாளை நடைபெறும் பாலஸ்தீனம் மீதான ஓ ஐ.சி. சிறப்பு கூட்டத்தில் மலேசியா பங்கேற்கும்
24 ஆகஸ்ட் 2025, 5:11 AM


