கோலாலம்பூர், ஆக. 20 - சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 2/1 இல் உள்ள தனது குடும்ப வீட்டில் கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கல்லூரி மாணவி ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சாட்சிகள் உட்பட 19 நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கான உண்மையான நோக்கத்தைக் கண்டறியவும் இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காணவும் விசாரணை இன்னும் நடந்து வருவதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
அம்மாணவியின் மரணம் தொடர்பில் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் இது குறித்த ஆகக்கடைசி தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இருபது வயது மதிக்கத்தக்க அந்த மாணவி காலை 11.55 மணியளவில் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் வரவேற்பரையின் கூரை நிலைக் காற்றாடியில் தூக்கில் தொங்கியதை அவரது தந்தை கண்டுபிடித்தார்.
அப்பெண்ணின் இறப்புக்கு கையால் கழுத்தை நெரித்ததன் விளைவாக ஹையாய்டு எலும்பைச் சுற்றி ஏற்பட்ட இரத்தப்போக்கும் தசைகள் மற்றும் எலும்புகளில் ஏற்பட்ட காயங்களும் காரணமாக இருந்தது செர்டாங் மருத்துவமனை உடற்கூறு நிபுணரின் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டன.
தனது சகோதரி மற்றும் உறவினருடன் வசித்து வந்த அப்பெண் சம்பவத்தின் போது தனியாக காணப்பட்டார். மேலும் வீட்டிலிருந்த சொத்துகளுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக பொதுமக்கள் எந்தவிதமான ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கல்லூரி மாணவி மரணம் - 19 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு
20 ஆகஸ்ட் 2025, 3:03 AM


