கோலாலம்பூர், ஆக.16- மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கம் உள்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதில் ஊடகவியலாளர்கள் குறிப்பாக தமிழ்ப் பத்திரிகையாளர்கள் அளப்பரிய பங்கினை ஆற்றி வருகின்றனர் என்று தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சொங் தெரிவித்தார்.

இதன் வழி சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பாலமாகவும் ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர் என்றார்.
செய்தியாளர் பணி என்பது சவால்மிக்கது. போலியான தகவல்கள் மலிந்து கிடங்கும் தற்போதைய உலகில் ஒரு செய்தியை உடனடியாகவும் துல்லிதமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது சுலபமான பணி கிடையாது என அவர் தெரிவித்தார்.
தலைநகர், ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள விஸ்மா ஜெயபக்தி மண்டபத்தில் இன்று நடைபெற்ற மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் 8ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தகவலறிந்த மற்றும் போட்டியாற்றல்மிக்க மக்களை உருவாக்குவதிலும் சமூகத்தில் சுபீட்சத்தை வலுப்படுத்துவதிலும் செ.வே.முத்தமிழ் மன்னன் தலைமையிலான மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம் ஆற்றி வரும் அளப்பரிய பங்கை துணையமைச்சர் வெகுவாகப் பாராட்டினார். .
தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கும் அதன் உறுப்பினர்களின் நலனுக்கும் தேவையான உதவிகளை வழங்க தாங்கள் தயாராக உள்ளதாக அவர் கூறினார்
தற்போது போலி செய்திகள் வெகு விரைவில் பரவுகின்றன. பல்வேறு இலக்கவியல் தளங்களில் இவை பகிரப்படும்போது மக்கள் இவற்றை எளிதாக நம்பிவிடுகின்றனர். இது கவலை அளிக்கிறது என்றார் அவர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) 5,367 போலி செய்திகளை அகற்றிவிட்டது. இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்து 17,245 ஆக ஆனது. கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை 16,110 போலி செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி காணொளி மற்றும் போலியான குரலில் பேசி பேர்வழிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆகையால், எந்தவொரு தகவலையும் அதன் உண்மை நிலை தெரியும் வரை மற்றவர்களுக்குப் பகிர்வதைத் தவிர்க்கும்படி துணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.



