ஷா ஆலம், ஆக. 12 - காராக் நெடுஞ்சாலையின் 35.1வது கிலோமீட்டரில் கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் தடத்தில் நேற்று சிமெண்ட் ஏற்றிச் சென்ற லோரி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.
காலை 11.15 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து சுமார் 5.4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோம்பாக் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மூல நீரை வழங்கும் கோம்பாக் நதி மாசுபடும் சாத்தியம் இருப்பதாக லுவாஸ் தெரிவித்தது.
லுவாஸ் நடத்திய சோதனையில் சம்பந்தப்பட்ட லோரியின் எண்ணெய் டாங்கியில் கசிவு ஏற்பட்டு அது அருகிலுள்ள நெடுஞ்சாலையின் நீர் சேகரிப்பு பள்ளத்தில் பாய்ந்தது கண்டறியப்பட்டது.
சாலை, நீர்த்தேக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மரத் தூள்களை வைப்பதன் மூலம் நெடுஞ்சாலை நிறுவனம் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது என்று லுவாஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
நெடுஞ்சாலை நீர்த்தேக்கத்திலிருந்து அருகிலுள்ள ஆற்றில் எண்ணெய்க் கழிவுகள் கலக்கவில்லை என்பதும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதும் சோதனையில் கண்டறியப்பட்டது.
இருப்பினும், அந்த இடத்தில் அனைத்து துப்புரவுப் பணிகளும் முழுமையாக முடிவடையும் வரை அருகிலுள்ள நீர் ஆதாரங்களுக்கு ஆபத்து ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய லுவாஸ் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும்.
எண்ணெய் கசிவு - கோம்பாக் ஆறு மாசுபடுவதை தவிர்க்க லுவாஸ் தீவிர நடவடிக்கை
12 ஆகஸ்ட் 2025, 3:54 AM


