கோலாலம்பூர், அக். 2- கடந்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நுரையீரல் பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக (ஓப்ஸ் செலாமாட் பாபா) முழுவதும் 281,381 வர்த்தக வளாகங்களை சுகாதார அமைச்சு சோதனை செய்துள்ளது.
இந்த சோதனையின் விளைவாக 2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (சட்டம் 852) கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 459 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஜூல்கிப்லி அகமது தெரிவித்தார்.
புகைபிடிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்திய குற்றத்திற்காக 7வது பிரிவின் கீழ் 340 விசாரணை ஆவணங்களும் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் நிபந்தனைகளை மீறி புகைபிடிக்கும் பொருட்களை விற்பனை செய்யாததற்காக 14வது பிரிவின் கீழ் 68 விசாரணை அறிக்கைகளும் திறக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதுதவிர, பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் நிபந்தனைகளைப் பின்பற்றாமல் புகைபிடிக்கும் பொருட்களை தயாரித்தல், இறக்குமதி செய்தல் அல்லது விநியோகித்ததற்காக 15வது பிரிவின் கீழ் மேலும் 51 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன.
அதிகரித்து வரும் மின்னியல் சிகரெட்டுகள் மற்றும் வேப்கள் உள்ளிட்ட புகைபிடிக்கும் பொருட்களின் ஆபத்துகளிலிருந்து இளைய தலைமுறையினரைப் பாதுகாப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக சிகரெட்டுகள் அல்லது வேப் விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடை செய்வதற்கான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று அவர் தேசிய அளவிலான ஓப் செலமட் பாபா தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
அனைத்து வகையான புகைபிடிக்கும் பொருட்களையும் தயாரித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மற்றும் ஒருங்கிணைந்த முறையில் தொடர்புடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஜூல்கிப்ளி தெரிவித்தார்.
852 வது சட்டத்தின் எந்தவொரு பிரிவையும் மீறும் பட்சத்தில் 100,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
281,381 சிகிரெட், வேப் விற்பனை மையங்கள் மீது சுகாதார அமைச்சு சோதனை
2 ஆகஸ்ட் 2025, 1:53 AM


