கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - 13வது மலேசியத் திட்டம் இந்தியர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி இருப்பதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார். இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மடாணி கொள்கைகளுக்கு ஏற்ப உள்ளது.
13வது மலேசியா திட்டம் (13MP) இந்திய சமூகத்தை ஓரங்கட்டாமல் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தின் அக்கறையை பிரதிபலிக்கிறது என்றார்.
இந்திய சமூகத்தின், குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் மேம்படுத்தப்படும் என்று டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார்.
அதில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறை, STEM, தொழிற்கல்வி மற்றும் தொழில் பயிற்சி (திவேட்) வாய்ப்புகள் உள்ளிட்ட கல்வி மற்றும் திறமை மேம்பாட்டின் அம்சங்களும் இத்திட்டத்தில் உள்ளடக்கி இருப்பதாக ரமணன் விவரித்தார்.
இத்திட்டத்தில், அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, வீடுகளைப் பழுது பார்க்கும் முயற்சிகள் போன்றவையும் அடங்கும்.
அதுமட்டுமின்றி, பொருளாதார நடவடிக்கைகள், தொழில்முனைவு மற்றும் சமூக மேம்பாட்டை வலுப்படுத்துவதும் உட்படுத்தப்பட்டுள்ளதாக ரமணன் தெரிவித்தார்.
--பெர்னாமா