கோலாலம்பூர், ஜூலை 28 - கடந்த 2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, வணிக உரிமங்கள் மற்றும் அனுமதிகளை சட்டவிரோதமாக வெளிநாட்டினருக்கு மாற்றுவது உட்பட பல்வேறு நிபந்தனைகளை மீறியதற்காக ஊராட்சி மன்றங்கள்
மொத்தம் 14,834 வணிக வளாகங்களுக்கு சம்மன்களை வழங்கியுள்ளன.
இந்தக் குற்றத்திற்காக 2,880 வளாகங்கள் சீல் வைக்கப்பட்ட வேளையில் 23 வளாகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
எந்தவொரு வெளிநாட்டினரும் வணிகம், சிறு வணிகம், வணிக வளாகம், சில்லறை விற்பனைக் கடை, உணவகம், கார் பட்டறை மற்றும் சந்தை உரிமத்திற்கு விண்ணப்பிக்கவோ அல்லது வைத்திருக்கவோ அமைச்சும் ஊராட்சி மற்று அதிகாரிகளும்
ஒருபோதும் அனுமதித்ததில்லை என்பதையும் வலியுறுத்தினார்.
ஊராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அங்காடி வர்த்தக வளாகத்தில் வெளிநாட்டினரை தொழிலாளர்களாகப் பயன்படுத்துவதையும் ஊராட்சி மன்றங்கள் அனுமதிக்காது.
ஏனெனில் வணிக வாய்ப்புகள் மூலம் நாட்டு மக்களுக்கு உதவுவதிலும் உள்ளூர் வர்த்தகர்களின் பொருளாதார உயர்வை உறுதி செய்வதிலும் அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
மக்களவையில் இன்று மலேசியாவில், குறிப்பாக சில்லறை வணிகத் துறையில் வெளிநாட்டினர் வணிகங்களைத் தொடங்குவதற்கான சுதந்திரம் குறித்து உலு சிலாங்கூர் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் முகமது ஹஸ்னிசான் ஹருண் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
வணிகர்க துணைச் சட்டங்கள் மற்றும் வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிம துணைச் சட்டங்கள் போன்ற தற்போதைய கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் மலேசிய குடிமக்கள் மட்டுமே வணிக உரிமங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்புகிறார்கள். மேலும், செல்லுபடியாகும் பணி அனுமதி அல்லது வர்த்தக அனுமதி இருந்தால் மட்டுமே வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த முடியும் என்றும் ங்கா கூறினார்.
உள்ளூர் அதிகாரிகளால் அமலாக்க மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் எப்போதும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய அவர் குறிப்பாக வெளிநாட்டினர் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் வணிக வளாகங்கள் மற்றும் வியாபாரிகளை தொடர்ந்து கண்காணித்தல், வெளிநாட்டு வியாபாரிகளிடமிருந்து பொருட்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.


