ஷா ஆலம், ஜூலை 25 - நீண்டகாலமாக வாடகை பாக்கித் தொகையை செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து கோத்தா டாமன்சாரா சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்கள் வீட்டுவசதி திட்டத்தின் (பி பி.ஆர்.) 80 குடியிருப்பாளர்களுக்கு சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்துடமை வாரியம் (LPHS) சிவப்பு நினைவூட்டல் அறிவிப்புகளை அனுப்பியுள்ளது.
உண்மையிலேயே தகுதியானவர்கள் மட்டுமே அந்த குடியிருப்புகளில் தொடர்ந்து வசிப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கோத்தா டாமன்சாரா தொகுதி உறுப்பினர் இஸூவான் காசிம் கூறினார்.
வாடகைப் பாக்கித் தொகையைச் செலுத்தவும் அவர்களின் தகுதி நிலையை மதிப்பாய்வு செய்யவும் ஒரு நினைவூட்டலாக 80 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
சிலாங்கூர் ஸக்கத் வாரியத்திடமிருந்து வீட்டு வாடகை உதவியைப் பெற்றாலும் இன்னும் வாடகையை செலுத்தத் தவறியது, வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அதனை வேறு தரப்பினருக்கு வாடகைக்கு விட்டது போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்று அவர் கூறினார்.
இங்குள்ள டத்தாரன் பாசார் தனி கம்போங் மிலாயு சுபாங், சுராவ் நூர் ரஹ்மானில் நேற்று நடைபெற்ற புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியிளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
வீட்டு வசதி வாரியம் இதற்கு முன்னர் பல முறை எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டதோடு சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நீர் விநியோகத்தையும் துண்டிக்க நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும், சிலர் அண்டை வீடுகளிலிருந்து நீர் விநியோகத்தை இணைத்துள்ளனர். எனவே, இந்த பி.பி.ஆர். குடியிருப்புகளில் வாடகைக்கு எடுக்க தகுதியுள்ள மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பலர் இன்னும் இருப்பதால் நிலுவைத் தொகையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.


