ஷா ஆலம், ஜூலை 24 - எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் 2025 சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு (சிப்ஸ்) ஆசியான் பிராந்தியத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார ஆற்றலை எடுத்துக்காட்டக்கூடிய புத்துணர்ச்சிமிக்க நிகழ்வாக விளங்கும்.
இவ்வாண்டிற்கான இந்த மாநாட்டின் ஏற்பாடு, முற்போக்கான பிராந்திய வர்த்தக மற்றும் முதலீட்டு மையம் என்ற சிலாங்கூரின் நிலையை வலுப்படுத்தும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஆசியான் தலைவராக உள்ள மலேசியாவின் பங்கிற்கு ஏற்ப உள்ளடக்கிய, துடிப்பான மற்றும் பிராந்திய முதலீடு மற்றும் புதுமை மையமாக மாறுவது சிலாங்கூரின் நோக்கமாகும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் வரும் அக்டோபர் 8 முதல் 11 வரை நடைபெறும் 2025 சிப்ஸ் மாநாட்டிற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வர்த்தகத் தொழில்துறையினரை ஒன்றிணைக்கும் வகையில் 700க்கும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை, 300க்கும் மேற்பட்ட காட்சிகூடங்களில் கென்யா, உகாண்டா, தாய்லாந்து, தென் கொரியா மற்றும் புருணை உள்ளிட்ட அனைத்துலகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலங்களின் பிரதிநிதிகள் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்காசியா முழுவதும் விளம்பரங்கள், முகப்பிடம் தளவமைப்புகள் மற்றும் எல்லை தாண்டிய வணிக பொருத்தத் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் இப்போது 50 விழுக்காடு நிறைவடைந்துள்ளன என்று இங் கூறினார்.
முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இடையே பரந்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு மன்றங்கள் மற்றும் விவேகப் பொருத்த அமர்வுகளை ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


