ஷா ஆலம், ஜூலை 18 - சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர்
பொறுப்பிலிருந்து விரைவில் விடைபெறவிருக்கும் டத்தோஸ்ரீ ஹூசேன்
ஓமார் கானுக்கு மாநில அரசு தனது பாராட்டுகளையும் நன்றியையும்
தெரிவித்துக் கொண்டுள்ளது.
தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும் விரைவில் பொறுப்பேற்கவிருக்கும்
புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற விசாரணைத் துறையின்
இயக்குநர் பொறுப்பை செவ்வனே ஆற்றுவதற்கும் தாங்கள் வாழ்த்துவதாக
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவராக பணியாற்றிய காலத்தில்
வழங்கிய சிறப்பான சேவைக்கு மாநில அரசின் சார்பில் மனப்பூர்வமான
பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில போலீஸ் தலைவராக ஹூசேன் பணியாற்றிய ஈராண்டு காலத்தில்
குறிப்பாக எல்மினா விமான விபத்து மற்றும் புத்ரா ஹைட்ஸ் எரிவாயு
குழாய் தீவிபத்து போன்ற பேரிடர்களின் போது மாநில அரசுக்கும் காவல்
துறைக்கும் இடையே அணுக்கமான உறவு நிலவி வந்ததை அமிருடின்
தனது பேஸ்புக் பக்கத்தில் நினைவுக்கூர்ந்தார்.
எம்.எச்.17 விமான விபத்து தொடர்பான தடயவியல் விசாரணைக் குழுவில்
பங்கேற்பு உள்பட காவல் துறையில் உள்ள பரந்த அனுபவம் ஹூசேன்
ஏற்கவுள்ள புதிய பதவிக்கு பெரும் பயனுள்ளதாக விளங்கும் என்றும்
அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஜூலை 17ஆம் தேதியுடன் எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட
கொடூரச் சம்பவம் நிகழ்ந்து 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த
பேரிடர் தொடர்பான தனது அனுபவத்தை ஹூசேன் ஒரு முறை
என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பலியானவனர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக விமானம்
விழுந்த இடத்திற்கு அனுப்பப்பட்ட போலீஸ் தடயவியல் நிபுணர்கள்
குழுவில் ஹூசேனும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என
அமிருடின் அந்த பதவில் கூறியுள்ளார்.


